IND vs SL: தனியாளாக அணியை மீட்ட துனித் வெல்லலகே.. இந்தியாவிற்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. பல்லேகேலே மைதானத்தில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பிரமதேச மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் முன்னிங்ஸ் முடிவில் 230 ரன்கள் சேர்த்துள்ளது.
சரிந்த அணியை மீட்ட துனித் வெல்லலகே..
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு 3வது ஓவரிலேயே அவிஷ்காவை வெளியேற்றிய முகமது சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். அதற்குபிறகு பதும் நிசாங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தாலும், எதிர்முனையில் இருந்த குசால் மெண்டீஸ் 14 ரன்கள், சதீரா 8 ரன்கள், கேப்டன் அசலங்கா 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது இலங்கை அணி.
உடன் சிறப்பாக விளையாடி அரைசதமடித்த தொடக்க வீரர் நிசாங்காவும் 56 ரன்னில் வெளியேற, 101 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
அதற்குபிறகு எப்படியும் இலங்கை விரைவில் சுருண்டுவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில், 7வது வீரராக களமிறங்கிய துனித் வெல்லலகே 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி ரன்களை எடுத்துவந்தார். கடைசியில் வந்து துனித் 67 ரன்கள் அடிக்க 230 ரன்கள் என்ற கௌரவமான டோட்டலை எட்டியது இலங்கை அணி.
231 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிவருகிறது.