மீண்டும் ஐபிஎல் தொடக்கம்| RCB-KKR மோதும் ஆட்டம் மழையால் தாமதம்!
2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22 முதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டு பரபரப்பாக நடைபெற்றது. 10 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் 3 அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்த சூழலில் மீதமுள்ள 7 அணிகள் பிளேஆஃப் செல்வதற்கான முதல் 4 இடங்களுக்காக போட்டிப்போட்டு வருகின்றன. நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட போட்டிகள் ஜூன் 3 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் ஆர்சிபி-கேகேஆர் ஆட்டம் தாமதம்..
போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், இன்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதலின் மூலம் மீண்டும் தொடங்கப்பட திட்டமிடப்பட்டது.
இந்த சூழலில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கப்படவிருந்த ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தாமதமாகியுள்ளது. இன்னும் டாஸ் போடப்படாத நிலையில், மழை நிற்பதற்காக அணிகள் காத்திருக்கின்றன.
ஆர்சிபி அணியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த படிக்கல், ஹசல்வுட் முதலியோர் இல்லாத நிலையில், அந்தணி எப்படி செயல்படபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் களம்காண்கிறது.