கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது ஐபிஎல் 2025.. முதல் போட்டியில் RCB பவுலிங்!
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்காக இருந்துவரும் ஐபிஎல் தொடர் 2008 முதல் விளையாடப்பட்டு வருகிறது. 17 வெற்றிகரமான சீசன்களை கடந்து 18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது.
இதில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்கிவருகிறது. தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17 சீசன்களில் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று வலுவான அணியாக விளங்குகிறது.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மும்பை அணி 6 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு சென்று 5 முறை கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
மற்ற அணிகளை பொறுத்தவரையில் 3 கோப்பைகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் தலா 1 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளன.
உலகின் சிறந்த டி20 கிரிக்கெட் லீக்காக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் எந்த அணி கோப்பை வெல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது ஐபிஎல் 2025!
2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது. கொல்கத்தாவை அஜிங்கியா ரஹானேவும், ஆர்சிபியை ரஜத் பட்டிதாரும் வழிநடத்தவிருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் விழாவை தொடங்கி வைக்க, ஸ்ரேயா கோஷல், கரன் அவ்ஜ்லா மற்றும் திஷா பதானி முதலியோர் பாடல் மற்றும் ஆடலுடன் விழாவை மேலும் சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து ஷாருக் கான், விராட் கோலி, ரிங்கு சிங் மூன்றுபேரும் மேடையில் ஒன்றாக நடனமாடி மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டு, கேக் வெட்டப்பட்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது.
டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி ஐபிஎல் 2025 தொடக்க போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது.