IndVPak போட்டி ரத்து | இந்தியாவைக் கடுமையாகச் சாடிய பாக் வீரர்!
அரசியல் நெருக்கடி காரணங்களால் இந்திய அணி, அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாடுவதில்லை. அதேநேரத்தில், ஐசிசி தொடர்களில் பொதுவான நாட்டில் நடைபெறும் மைதானங்களில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையே உறவு மேலும் விரிசலடைந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் 2ஆவது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், “இந்த தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர், “உலகம் முழுவதும் அவர்களைப் (இந்திய அணி) பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் என்ன செய்தியை அனுப்பியுள்ளனர்? அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி, எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம். இதை ஒரு வாக்குறுதியாகக் கொடுங்கள். பாருங்கள், எல்லாவற்றுக்கும் ஓர் இடம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் இப்போது நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம். ஒலிம்பிக்கில்கூட வேண்டாம். முடிந்தால் அதைச் செய்யுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன். இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 - 5 இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக்கில் இந்திய அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக உள்ளார். அவ்வணியில் ஷிகார் தவான், ஹர்பஜன் சிங், யூசுப் மற்றும் இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா மற்றும் வருண் ஆரோன் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.