ஒரே போட்டியில் 4 உலக சாதனை.. அசத்திய அர்ஜென்டினா லியோனல் மெஸ்சி!
செய்தியாளர்: ஆண்டோ எம் தாம்சன்
அமெரிக்காவில் நடந்து வரும் கிளப் அணிகள் உலகக் கோப்பை தொடரில் இன்டர் மியாமி அணிக்காக லியோனல் மெஸ்சி விளையாடி வருகிறார். இன்று நடந்த நியூ இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இன்டர் மியாமி அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் மியாமி அணியின் வெற்றிக்கு காரணம் ஆட்டத்தின் 27 மற்றும் 38ஆவது நிமிடங்களில் மெஸ்சி அடித்த இரண்டு கோல்கள்தான். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர், ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். நியூ இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், இளம்வயதில் 870 கோல்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோன்று 18 அடி பாக்சுக்கு வெளியே இருந்து 100 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும் அதிவேகமாக 870 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி தன்வசமாக்கியுள்ளார். எம்.எல்.எஸ். தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இரண்டு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் லியோனல் மெஸ்சி நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆயிரத்து 202 போட்டிகளில் இந்த மைல்கல்லை அவரது 38 வயது 321 நாட்களில் எட்டியிருந்தார். ஆனால் லியோனல் மெஸ்சி, இந்த மைல்கல்லை ஆயிரத்து 111 போட்டிகளில் 38 வயது 15 நாட்களில் எட்டி அசத்தியுள்ளார்.