சூப்பர் 8: ஒரே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான். ஏன் இப்படி?

ஐசிசி-யின் இந்த முடிவு பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பல விமர்சகர்களும் இதை முட்டாள்தனம் என்று கூறிவருகிறார்கள்.
Super 8
Super 8 T20 World Cup
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. 20 நாடுகள் பங்கேற்ற குரூப் சுற்று முடிவுக்கு வந்த நிலையில் இப்போது சூப்பர் 8 சுற்று தொடங்கப்போகிறது. இதில் விளையாடப்போகும் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுதான் இப்போது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. அந்த அணிகள் புள்ளிப் பட்டியலில் முடித்த இடத்தை வைத்து இல்லாமல், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ஸ்லாட்டை வைத்து சூப்பர் 8 பிரிவு பிரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் அந்த சர்ச்சை. அது என்ன முறை, எதனால் இது நடந்திருக்கிறது? ஏ மற்றும் பி பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் எப்படி ஒரு குரூப்பில் இடம்பெற்றிருக்கின்றன?

இந்த சூப்பர் 8 சுற்றின் இரு பிரிவுகள்

முதல் பிரிவு: இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்
இரண்டாவது பிரிவு: அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா

வழக்கமாக இப்படி குரூப் பிரிக்கப்படும்போது ஏ மற்றும் சி பிரிவில் முதலிடம் பிடிக்கும் இரு அணிகள், பி மற்றும் டி பிரிவில் இரண்டாவது இடம் பிடிக்கும் இரு அணிகள் என அந்த 4 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெறும். ஏ2, பி1, சி2, டி1 ஆகிய இடங்களில் முடிக்கும் அணிகள் மற்றொரு பிரிவில் இடம்பெறும். அந்த வகையில் பார்த்தால், சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் முடித்திருக்கவேண்டும். பி பிரிவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால் இது அப்படியே மாறியிருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும்போது ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகளுக்கு seeding கொடுக்கப்பட்டது. அதாவது டென்னிஸ் தொடர்களில் கொடுக்கப்படுவது போல் ஒரு ரேங்கிங். ஒவ்வொரு குரூப்பிலும் இருக்கும் அணிகளுக்கும் ரேங்கிங் மற்றும் முந்தைய பெர்ஃபாமன்ஸ் ஆகியற்றை வைத்து இந்த 'சீடிங்' கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா (ஏ1)
பாகிஸ்தான் (ஏ2)
இங்கிலாந்து (பி1)
ஆஸ்திரேலியா (பி2)
நியூசிலாந்து (சி1)
வெஸ்ட் இண்டீஸ் (சி2)
தென்னாப்பிரிக்கா (டி1)
இலங்கை (டி2)

இதன் அடிப்படையில் ஏ1, பி2, சி1, டி2 ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் குருப் 1ல் இடம்பெறும். ஏ2, பி1, சி2, டி1 ஆகிய அணிகள் குரூப் 2 பிரிவில் இடம்பெறும். அதற்கு அந்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினாலே போதும். இந்திய அணி லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்பது இல்லை. அந்த அணி முதலிடத்தில் முடித்தாலும், இரண்டாவது இடத்தில் முடித்தாலும் இந்தியா தான் ஏ1 இடத்தில் முடிக்கும். அதனால் அந்த அணி குரூப் 1ல் தான் இடம்பெறும்.

ஒருவேளை சீடிங் கொடுக்கப்பட்ட அணிக்குப் பதிலாக வேறொரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அந்த அணிக்குக் கொடுக்கப்பட்ட சீடிங்கை எடுத்துக்கொள்ளும். உதாரணமாக சி பிரிவில் நியூசிலாந்துக்கு சி1 சீடிங் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அணிக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. புள்ளிப் பட்டியல் படி பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும் முடித்தன. ஆனால் நியூசிலாந்துக்கு பதிலாக முன்னேறிய ஆப்கானிஸ்தான், நியூசிலாந்தின் சி1 சீடிங்கை எடுத்துக்கொள்ளும். அதனால் ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் பிரிவிலேயே இடம்பெற்றிருக்கிறது. குரூப் பி-யில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் முடித்தன. இருந்தாலும், முன்பே கொடுக்கப்பட்டிருனத் சீடிங்கின் படி இங்கிலாந்து பி1 இடத்தையும், ஆஸ்திரேலியா பி2 இடத்தையும் எடுத்துக்கொண்டன. அதனால் ஆஸ்திரேலியாவும் இந்தியாவின் பிரிவிலேயே இடம்பெற்றிருக்கிறது.

ஐசிசி-யின் இந்த முடிவு பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பல விமர்சகர்களும் இதை முட்டாள்தனம் என்று கூறிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com