முகமது அசாருதீன் பங்களாவில் திருட்டு.. போலீஸ் விசாரணை!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் புனேவில் உள்ள பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், முகமது அசாருதீன். இவருடைய மனைவி சங்கீதா பிஜ்லானிக்குச் சொந்தமாக புனே மாவட்டம், மாவல் தாலுகா, டிகோனா பெத்தில் லோனாவாலா பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பின்புற சுவரின் கம்பி வலையை அறுத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் முதல் மாடி கேலரியில் ஏறி, ஜன்னல் கிரில்லை வலுக்கட்டாயமாக திறந்து, பங்களாவுக்குள் நுழைந்து, ரூ.50,000 ரொக்கத்தையும், சுமார் ரூ.7,000 மதிப்புள்ள ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளர் முகமது முஜிப் கான் புகார் அளித்துள்ளார். சம்பாஜிநகரில் வசிக்கும் கான், மார்ச் 7 முதல் ஜூலை 18 வரை பங்களாவில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.