வளர்ந்து வரும் கிரிக்கெட் உலகில் பலவித தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்பைடர் கேமரா (spider cam). இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக மைதானத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவையும் துல்லியமாக படம்பிடிக்கப்படுகிறது. சில நேரங்களில், பந்துவீச்சாளரின் தலைக்கு அருகே வரை சென்று அங்கு நடப்பவற்றை மிகவும் துல்லியமாகப் படம் பிடிக்கிறது.
பந்துவீச்சாளர் மட்டுமின்றி, அனைத்து வீரர்களின் செயல்களையும் அது படம் பிடிக்கிறது. இதன்மூலம் எந்த அணிகளுக்கும் சாதக பாதகமின்றி துல்லியமான தீர்வுகளை நடுவர்கள் வழங்குகின்றனர். இப்படி நன்மைகள் சொல்லப்பட்டாலும், அதேநேரத்தில் இது வீரர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுகிறது.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டேவன் கான்வே, “ஒவ்வொரு நிகழ்வையும் இத்தொழில் நுட்பம் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றாலும், இது விளையாடும்போது வீரர்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது என்பதும் உண்மை. வீரர்கள் ஃபீல்டிங் செய்யும்போது அருகே வந்து இது குறுக்கிடுகிறது. குறிப்பாக, ஸ்பைடர் கேமராவுக்கு அருகில் பந்து வருவதால் சிரமம் ஏற்படுகிறது. இது, எல்லா வீரர்களுக்கும் இடைஞ்சலாகத்தான் இருக்கிறது. இதுகுறித்து கேப்டன் தோனி, நடுவர்களிடம் புகார் அளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற 24வது ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு, 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதில் சென்னை அணி வீரர் டேவன் கான்வே, 45 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் மூலம் 83 ரன்கள் எடுத்து மேன் ஆஃப் மேட்ச் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.