’இளம் வீரர்கள் கொண்ட சிஎஸ்கே அணி வலுவானதாக திரும்ப வரும்’ - சிஇஒ காசி விஸ்வநாதன் நம்பிக்கை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உள்ள கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்கப்படுத்த சூப்பர் கிங்ஸ் அகாடமி நிறுவப்பட்டு உலககெங்கிலும் 25க்கும் மேற்பட்ட சூப்பர் கிங்ஸ் அகாடமி கிரிக்கெட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முதல் பயிற்சி மையம் மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ( StandsFord School) திறக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் , சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிவ சங்கரன் உள்ளிட்டோருடன் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இளம் வீரர்கள் வருங்காலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்..
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை அணி நல்ல அணி தான் இருந்தபோதிலும் தற்போது சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். ஆனால் வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
மேலும் சென்னை அணையில் இளம் வீரர்கள் நிறைய பேர் இருப்பதாகவும், அவர்கள் வருங்காலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.