முஷ்டாக் அலி கோப்பை: தினேஷ் கார்த்திக் விளாசலில் ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழகம்!
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் ராஜஸ்தானை இன்று எதிர்கொண்ட தமிழக அணி, 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி, கேரள மாநிலம் தும்பாவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் கேரளாவை சந்தித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், திருவனந்தபுரம் அருகில் உள்ள தும்பாவில் இன்று நடந்த போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்டது. முதலில் ஆடிய தமிழக அணி, 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 35 ரன்களும், ஜெகதீசன் 34 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் தமிழக அணி, 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.