நியூ. பந்துவீச்சை துவம்சம் செய்து இரட்டை சதம் விளாசிய கில்; இந்தியா 349 ரன் குவிப்பு

நியூ. பந்துவீச்சை துவம்சம் செய்து இரட்டை சதம் விளாசிய கில்; இந்தியா 349 ரன் குவிப்பு
நியூ. பந்துவீச்சை துவம்சம் செய்து இரட்டை சதம் விளாசிய கில்; இந்தியா 349 ரன் குவிப்பு

இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில்லின் இரட்டைச் சதத்தால் இந்திய அணி 349 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி, இன்று (ஜனவரி 18) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். வழக்கம்போல் ரோகித் சர்மா 38 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 34 ரன்களில் நடையைக் கட்டினார். அவர் தொடர்ந்து பேட்டிங்கில் சோபித்து வருகிறார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் அவர் 83 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் அவருடன் தொடக்க பேட்டராய்க் களமிறங்கிய சுப்மான் கில் இந்தப் போட்டியிலும் சதமடித்து அசத்தினார். 87 பந்துகளில் 17 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதமடித்த அவர், குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாய் ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அவருக்கு இது மூன்றாவது சதமாகும். கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் அவர் சதம் கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறுமுனையில் நிலைத்து நிற்க, இன்றைய போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட் கோலி, 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவரும் கடந்த போட்டியில் சதம் கண்டிருந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய வங்கதேசத்துக்கு எதிராகக் கடைசிப்போட்டியில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷனும் 5 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் 360 வீரரான சூர்யகுமார் யாதவ்வும் அதிரடியாய் ஆடி, 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நிலையில் பெவிலியன் திரும்பினார். அதுபோல் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்களில் அவுட்டானார்.

அவரும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வந்த வீரர்களும் கில்லுடன் நிலைத்து நின்று விளையாடாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால், சுப்மன் கில் தனி ஒருவனாய் நின்று பட்டையைக் கிளப்பினார். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சூறாவளிபோன்று சுழன்றடித்த அவர், 145 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் (200 ரன்கள்) பதிவு செய்தார். அவர் அடித்த முதல் இரட்டைச் சதம் இதுவாகும்.

49.2 ஓவர்கள் வரை களத்தில் நின்ற அவர் 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய பங்களிப்பால் இந்திய அணி 300 ரன்களைத் தாண்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லே மற்றும் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இதில் ஷிப்லே மற்றும் ஃபெர்குஷன் ஆகியோர் 70க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com