வீரர்கள் தயக்கத்தை மீறி பாக். செல்கிறது இலங்கை!
பாகிஸ்தானில் சென்று கடைசி டி20 போட்டியில் விளையாடுவதை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
இலங்கை அணி, கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி, பாகிஸ்தான் தொடரை ரத்து செய்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே மட்டும் விளையாடியது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் இப்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறாமல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி டி20 போட்டி, அவர் 29 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற இருக்கிறது.
அங்கு சென்று விளையாட, இலங்கை வீரர்கள் தங்கள் தயக்கத்தை தெரிவித்தனர். இது தொடர்பாக, வீரர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பினர். அதில் லாகூர் போட்டியை வேறு நாட்டில் நடத்த கோரிக்கை வைத்தனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.
’இலங்கை கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பாதுகாப்பு விஷயங்கள் பற்றி பேசியது. இதில் திருப்தி ஏற்பட்டதால் லாகூர் சென்று விளையாட முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.