“பாகிஸ்தானுக்காக விளையாட முடியாமல் போனது வருத்தமே”-இம்ரான் தாஹிர்

“பாகிஸ்தானுக்காக விளையாட முடியாமல் போனது வருத்தமே”-இம்ரான் தாஹிர்
“பாகிஸ்தானுக்காக விளையாட முடியாமல் போனது வருத்தமே”-இம்ரான் தாஹிர்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது வருத்தம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர் இம்ரான் தாஹிர். அவரது ஆரம்ப கால கிரிக்கெட் பயிற்சியும் அங்கிருந்து தான் ஆரம்பித்தது. “நான் லாகூரில் கிரிக்கெட் விளையாடி பழகி உள்ளேன். எனது வாழ்நாளில் பெரும்பாலான கிரிக்கெட்டை நான் பாகிஸ்தான் மண்ணில் தான் விளையாடினேன். அதன் விளைவாக பாகிஸ்தான் அணியின் அண்டர் 19 மற்றும் ஏ அணியில் இடம்பெறமுடிந்தது. அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விளையாட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதை நினைத்து நான் பெருத்த ஏமாற்றமடைந்தேன். இன்றுவரை அது எனக்கும் வருத்தம் அளித்து வருகிறது.

 2006-இல் என் மனைவியின் சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தேன். பாகிஸ்தானை விட்டு வெளியேறியபோது வருத்தமாக இருந்தது. இருப்பினும் கடவுளின் ஆசீர்வாதத்தால் தென்னாப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த பெருமை என் மனைவியையே சேரும்” என அண்மையில் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்  தாஹிர்.

தென்னாப்பிரிக்கப் பெண்ணான சுமய்யா தில்தாரை தாஹிர் மணந்தார். அதன் மூலம் 2009-இல் தென்னாப்பிரிக்க குடிமகனான அவர் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகமானார். 

107 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியுள்ளார். 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு அறிவித்த அவர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்காக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். தாஹிர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com