‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்

‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை அணியின் ஆல் ரவுண்டரும், முன்னாள் கேப்டனுமான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக பாதியில் வெளியேறியதாக கூறப்பட்டநிலையில், கேப்டன்சி விவகாரத்தில் அவர் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 64 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், இன்று நடக்கும் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இதில் 5 முறை சாம்பியனான மும்பை அணியும், 4 முறை கோப்பையை வென்ற சென்னை அணியும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் ஆரம்பம் முதலே பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. மெகா ஏலத்திற்கு முன்னதாக கேப்டன் தோனியை விட, ரவீந்திர ஜடேஜா 16 கோடி ரூபாயக்கு சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டார். இதனால் அப்போதே, தோனிக்கு வயதாகுவதால் இந்த சீசனில் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தான் களமிறங்குவார் எனக் கணிக்கப்பட்டது. அதன்படி, இந்த சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியநிலையில், சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார்.

பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் உலகத் தரம் வாய்ந்த வீரராக அறியப்பட்ட ரவீந்திர ஜடேஜா முதன்முதலாக கேப்டன் பதவியை ஏற்றதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்று ஆடிய முதல் 8 போட்டிகளில், 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே பார்மிலிருந்து விலகி விமர்சனத்திற்குள்ளானார்.

களத்தில் தோனியே முடிவுகளை எடுப்பதாகவும், கேப்டன் பொறுப்பில் தோனி தலையீடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சுதந்திரமாக ஜடேஜாவால் கேப்டன் பொறுப்பை சரிவர செய்யமுடியவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது திறமை மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தோனியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தோனி தலைமையில் சென்னை அணி முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. ஆனால் அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய சென்னை அணி படுதோல்வியை சந்தித்து, பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இதற்கிடையில், ரவீந்திர ஜடேஜா ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்காதநிலையில், எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது.

ரவீந்திர ஜடேஜாவின் காயம் பாதிதான் சரியாகியுள்ளதாகவும், இந்த காயத்தோடு அடுத்த போட்டியில் பங்கேற்றால், அது ஜடேஜாவுக்கு பெரிய பிரச்சினையாக மாறும் என சென்னை அணி மருத்துவர்கள் எச்சரித்ததால்தான் ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது. எனினும், சென்னை அணி நிர்வாகம் மற்றும் ரவீந்திரா ஜடேஜா தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து ஒருவொருக்கொருவர் ஃபாலோ செய்வதை நிறுத்தியதால், அதிக அளவிலான கேள்விகள் எழுந்தன.

சுரேஷ் ரெய்னாவுக்கு நடப்பது போன்று, ஜடேஜாவிற்கும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால்தான் ஜடேஜா அதிருப்தியடைந்து எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திரா ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது ‘இன்சைடு ஸ்போர்ட்ஸ்’ வலைத்தள பக்கத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “ஆம் ரவீந்திரா ஜடேஜா தற்போது மன வருத்தத்திலும், மிகுந்த மன வேதனையுடன்தான் இருக்கிறார்.

கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவை, நிர்வாகம் இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம். ஆனால் அனைத்துமே வேகமாக நடைபெற்று முடிந்துவிட்டது. இதுபோன்ற விஷயங்கள் ஜடேஜாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த வீரருக்கு நடந்திருந்தாலும், மன வலியைத்தான் தந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடம், சிஎஸ்கே அணியுடனான ஜடேஜாவின் உறவு முடிந்துவிட்டதா என்று கேட்கப்பட்டபோது, “இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஜடேஜா சென்னை அணியில் நீடிப்பாரா, இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் எவ்வளவு தீவிரமானது என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்பட பல முன்னாள் வீரர்கள் ரவீந்திர ஜடேஜாவின் காயம் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com