சானாவுக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது - மகளின் பதிவுக்கு கருத்து தெரிவித்த கங்குலி!
தனது மகளுக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது என கங்குலி தெரிவித்துள்ளார்
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவரருமான கங்குலியின் மகள் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில வரிகளை பதிவிட்டிருந்தார். குஷ்வந்த் சிங் எழுதிய 'தி எண்ட் ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளையே அவர் பயன்படுத்தி இருந்தார்.
அதில், ''தான் முஸ்லீம் இல்லை, கிறிஸ்துவன் இல்லை என்பதால் தங்களை பாதுகாப்பாக உணரும் நபர்களே, நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் குறி நாளை உங்கள் மீதும் பாயும். உங்களையும் அடக்குமுறைக்குள் கொண்டு வருவார்கள். இறைச்சி சாப்பிடாதீர்கள், மது அருந்தக் கூடாது, வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கக் கூடாது.
அவர்கள் சொல்லும் பற்பசையை பயன்படுத்தவேண்டும். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்த கொடுக்கப்படும் முத்தத்திற்கு பதிலாகவும், கைகுலுக்குவதற்கு பதிலாகவும் `ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்ல நேரிடும். யாருமே இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்தியாவை உயிர்ப்புடனே வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் இதனை உணர வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், கங்குலி மகளின் இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது. பலரும் சானாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தனது மகளின் பதிவு குறித்து கங்குலி ட்வீட் செய்துள்ளார். அதில், ''இந்த பிரச்னைகளில் இருந்து சானாவை விட்டுவிடுங்கள். பதிவு உண்மையில்லை. அவள் இளம்பெண். அவளுக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.