என்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம்? - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்

என்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம்? - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்

என்ன சொல்கிறது பயிற்சி ஆட்டம்? - பேட்டிங் வரிசையில் கோலிக்கு நீடிக்கும் சிக்கல்
Published on

எஸ்ஸெக்ஸ் அணியுடனான பயிற்சிப் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், பேட்டிங் வரிசையை எப்படி செயல்படுத்துவது என்பதில் கேப்டன் விராட் கோலிக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.  

தொடக்க வீரர்கள் யார்? - சொதப்பும் தவான்

இங்கிலாந்து தொடர் முழுவதுமே ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டி20 தொடரில் முறையே 4, 10, 5 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ஒருநாள் தொடரில் 40, 36, 44 ரன்கள் எடுத்த போதும் இந்திய அணி வெற்றிபெற பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. பயிற்சி ஆட்டத்தில் தவானின் ஆட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இரண்டு ஆட்டங்களிலும் டக் அவுட். முதல் இன்னிங்சில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் 3வது பந்தில் அவுட் ஆனார். வெளிநாட்டு மண்ணில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சிரமப்படுகிறார் என்பதையே காட்டுகிறது. 

தவானின் இந்த ஆட்டத்தால் தொடக்க வீரராக முரளி விஜய் உடன் அவரை களமிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் அந்த இடத்தை நிரப்புவார் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது. முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த ராகுல், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனால், முரளி விஜய் - கே.எல்.ராகுல் ஜோடி இறங்கதான் அதிக வாய்ப்புள்ளது.

ஏமாற்றிய புஜாரா

பயிற்சி ஆட்டத்தில் அதிகம் ஏமாற்றியவர் புஜாராதான். டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக விளையாடி ரன்களை குவிப்பவர் என்ற பெயர் எடுத்தவர் புஜாரா. டெஸ்ட் போட்டிக்கென்றே இருக்கும் வீரர்களுள் இவரும் ஒருவர். 3வது வீரராக களமிறங்கிய புஜாரா முதல் இன்னிங்சில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், 3வது விக்கெட் பார்ம் குறித்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் விக்கெட் விழுந்த பிறகு அடுத்து வரும் வீரர்தான் ஆட்டத்தை நிலைநிறுத்த வேண்டும். புஜாரா தடுமாறுவதால் அந்த இடம் சிக்கலாகியுள்ளது. 

சோபிக்காத ஸ்பின்னர்கள்

பயிற்சி ஆட்டத்தில் ஸ்பின்னர்கள் யாரும் விக்கெட்கள் எடுக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் மூன்று பேரும் 62 ஓவர்கள் வீசினர். ஆனால், ரன்களை தான் வாரி வழங்கினர். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் 4, இஷாந்த் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இருப்பினும், இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் இல்லாதது பின்னடைவு தான் என ஸ்டெயின் கூறிய கருத்தும் முக்கியமானதுதான். இதில் முக்கியமான விஷயம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது.

பாஃர்மில் கேப்டன் விராட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். பயிற்சி ஆட்டத்திலும் அவரது பேட்டிங் பாஃர்ம் வெளிப்பட்டது. முதல் இன்னிங்சில் 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறிய போது விராட் கோலி 68 ரன்கள் அடித்து சரிவில் இருந்து மீட்டார். அதனால், டெஸ்ட் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com