”உடம்பு சரியில்லாத அப்பவே இந்த அடினா.. நல்லாயிருந்தா!” - இங்கிலாந்தை புகழ்ந்த அக்தர்!

”உடம்பு சரியில்லாத அப்பவே இந்த அடினா.. நல்லாயிருந்தா!” - இங்கிலாந்தை புகழ்ந்த அக்தர்!
”உடம்பு சரியில்லாத அப்பவே இந்த அடினா.. நல்லாயிருந்தா!” - இங்கிலாந்தை புகழ்ந்த அக்தர்!

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் அணுகுமுறையை புதுப்பித்து வருவதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்.

வைரஸ் பாதிப்பால் இங்கிலாந்து வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிரச்சனை எதுவுமின்றி முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கியது.

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்ய, அவர்களது தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலமின் ”பேஸ்பால்” அணுகுமுறையை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. ஓபனர்கள் சாக் க்ராலி (122), பென் டக்கெட் (107) இருவரும் அடுத்தடுத்து சதமடித்து விளாச, தொடர்ந்து வந்த ஒல்லி போப் (108) மற்றும் ஹாரி புரூக் (101*) என அடுத்தடுத்து 4 வீரர்கள் சதமடித்து அசத்த, ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமின்றி முதல் நாளிலேயே 4 சதங்கள் அடித்த அணி என்ற புதிய சாதனையை படைத்தது இங்கிலாந்து.

அதுமட்டுமின்றி முதல் செஸ்ஸனில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் அடித்து, இதற்கு முன் இந்தியா அடித்திருந்த 158/0 என்ற சாதானையை முறியடித்தது. அவ்வளவு தான் இன்னைக்கு சாதனை என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் கைக்கோர்த்த ஹாரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் நாள் முடிவில் 506 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற புதிய ரெக்கார்டை படைத்தது இங்கிலாந்து.

இந்நிலையில் இங்கிலாந்து அணியை புகழ்ந்திருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், டெஸ்ட் கிரிக்கெட் குறித்த பிம்பங்களை இதுவரை வைத்திருந்தவர்களையும், இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் முறை எல்லாவற்றையும் உடைத்திருக்கிறது இங்கிலாந்து அணி என்று கூறினார்.

ஷோயப் அக்தர் அவரது டிவிட்டர் பதிவில், டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பின்வரும் விஷயங்களைக் கூறும் நபர்களுக்கு,

"ஓ டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஒரு வழி இருக்கிறது"

"ஓ, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என சொந்த வடிவம், அலங்காரம் உள்ளது"

"அதிக ஸ்ட்ரைக் ரேட்களை எதிர்பார்க்க வேண்டாம், ஏன்னா இது டெஸ்ட் கிரிக்கெட்" - இங்கிலாந்து அணியின் பதில் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் விரும்பும் வழியில் விளையாட்டை விளையாடுங்கள். மரபுகளை உடையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போட்டியின் முடிவிற்கு பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அக்தர், ”நல்லவேளை இங்கிலாந்து வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லை, உடல்நிலை சரியில்லாதபோதே 500 ரன்கள் வந்திருக்கிறது, ஒருவேளை நன்றாகயிருந்தால் எவ்வளவு ரன்கள் வந்திருக்குமோ?. இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் டெப்த் 7ஆது இடத்தில் இறங்கும் லிவிங்க்ஸ்டன் வரை இருக்கிறது. பாகிஸ்தான் அணியும் அதிரடி ஆட்டத்திற்கு மாறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் அக்தர், "இது ஒரு இளம் அணி, அனுபவமில்லா வீரர்கள் நிறைந்தது. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உண்மையில் மிகவும் காயப்படுத்துகிறது. இது எளிதான விசயம் அல்ல என்பதால் பாகிஸ்தான் தங்கள் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் குழந்தைகள் அடிக்கப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com