ஐபிஎல் 2023: கொல்கத்தாவுக்கு மாறிய ஷர்துல் தாகூர்; வருத்தத்துடன் விலகிய இங்கிலாந்து வீரர்!

ஐபிஎல் 2023: கொல்கத்தாவுக்கு மாறிய ஷர்துல் தாகூர்; வருத்தத்துடன் விலகிய இங்கிலாந்து வீரர்!

ஐபிஎல் 2023: கொல்கத்தாவுக்கு மாறிய ஷர்துல் தாகூர்; வருத்தத்துடன் விலகிய இங்கிலாந்து வீரர்!

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரை முன்னிட்டு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து, கொல்கத்தா அணிக்கு மாறியுள்ளார். அதேநேரத்தில் கொல்கத்தா அணியிலிருந்து இங்கிலாந்து வீரரான சாம் பில்லிங்ஸ் விலகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியான ஐபிஎல் 20 ஓவர் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு எப்போதும் உண்டு. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 16-வது சீசன் ஐபிஎல் தொடருக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு, டிசம்பர் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ளதால், தனது அணியில் தக்க வைத்துக்கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல்லின் 10 அணிகளும் நாளை 5 மணிக்குள் பிசிசிஐ-யிடம் சமர்பிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 10.75 கோடிக்கு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை, டெல்லி அணி வாங்கியிருந்தது. ஆனால், கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல்லில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்து வரும் ஷர்துல் தாகூர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்சில் 15 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியதால் அவரது எகானமி 9.79 ஆக இருந்தது. மேலும் 120 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவரை கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியுள்ளது.

முன்னாள் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும், ஷர்துல் தாகூரை எடுக்க விரும்பினாலும், கடைசியாக கொல்கத்தா அணி அவரை விலைக்கு வாங்கியுள்ளது. நேற்று குஜராத் டைட்டன்ஸிடமிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஆகியோரையும் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

அதேநேரத்தில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும், வலதுகை பேட்ஸ்மேனுமான இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் நீண்ட வடிவ உள்ளூர் கவுண்டி போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2022-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சாம் பில்லிங்ஸை 2 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com