அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா?

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா?
அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா?

அடிலெய்டில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர். 

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுலும், முரளி விஜய்யும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுலும் ஆட்டமிழந்தார்.

பின்னர் புஜாராவும், கேப்டன் விராத் கோலியும் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராத் கோலி அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா 40 ரன்னுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. மிகவும் பொறுமையாக ஆடிய புஜாரா 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துர் ரோகித் சர்மா வந்தார். அவரையும் லியான் தன் சுழலில் சிக்க வைத்தார். பின்னர் வந்த ரிஷாப் அதிரடியாக ஆடினார். அவரையும் லியான் விட்டுவைக்கவில்லை. 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ரிஷாப் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்வினும் நிலைத்து நிற்கவில்லை. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனை யில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரஹானேவை (70 ரன்) விக்கெட்டையும் லியான் சாய்க்க, அடுத்த வந்த இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் சரண்டர் ஆனார்கள். இதையடுத்து இந்திய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.ஆஸ் திரே லிய தரப்பில் லியான் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி னர்.

இந்திய அணி 323 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரோன் பின்சும் ஹாரிஸும் களமிறங்கினர். அஸ்வின், பின்ச் விக்கெட்டையும் முகமது ஷமி, ஹாரிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் கவாஜா வந்தார். அவரும் மார்ஷூம் ஜோடி சேர்ந்தனர். கவாஜா (8) அஸ்வின் பந்தை தூக்கியடித்து ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஹேண்ட்ஸ்கோம்ப் வந்தார். அவர் 14 ரன் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து டிராவிஸ் ஹெட் வந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அவரும் மார்ஷூம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. மார்ஷ் 31 ரன்க ளுடனும்  ஹெட் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற, 6 விக்கெட் கையில் உள்ள நிலையில் இன்னும் 219 ரன்கள் தேவை. அதே நேரம் நாளைய போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து வெற்றி பெறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. 

அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததது இல்லை. இந்த சாதனையை ஆஸ்திரேலியா படைக்குமா அல்லது இந்தியா சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் அங்கு  நிலவுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com