'ஸ்டெம்பை உதைத்து தூக்கி எறிந்து'- மைதானத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட ஷகிப் அல் ஹசன்

'ஸ்டெம்பை உதைத்து தூக்கி எறிந்து'- மைதானத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட ஷகிப் அல் ஹசன்
'ஸ்டெம்பை உதைத்து தூக்கி எறிந்து'- மைதானத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட ஷகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன், டாகா பிரீமியல் லீக் போட்டியில் ஸ்டம்பபை தூக்கியெறிந்தும், எட்டி உதைத்தும் அம்பயரிடம் செய்த வாக்குவாதம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவங்களுக்காக ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டு இருந்தாலும், இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

என்ன நடந்தது?

வங்கதேசத்தின் டாகா டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற போட்டியில் முகமதியன் ஸ்போர்ட்ஸ் கிளப், அபகனி லிமிடெட் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஸ்போர்ட்ஸ் கிளப் 145/6 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 27 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். இதனையடுத்து அபகனி லிமிடெட் அணி சேஸ் செய்ய களமிறங்கியது. அப்போது பந்துவீசிய கேப்டன் ஷகிப் அல் ஹசன், நடுவரிடம் எல்.பி.டபிள்யூ முறையிட்டார். நடுவர் அவுட் வழங்கவில்லை.

இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஷகிப் அல் ஹசன், அருகில் இருந்த ஸ்டெம்புகளை எட்டி உதைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடுவர்கள் ஹசனை எச்சரித்து அனுப்பினர். பின்னர் ஆட்டத்தின் 5.5ஆவது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. 6 ஓவர்கள் முடிந்தால் மட்டுமே டக்வொர்த் முறைப்படி வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்க முடியும். ஆனால், நடுவர்களோ 5.5 ஓவர் முடிந்ததும் வீரர்களை பெவிலியன் திரும்ப வேண்டுகோள் விடுத்தனர். பேட்ஸ்மேன்கள் இருவரும் சென்றுவிட்டனர்.

ஆனால், ஷகிப் அல் ஹசன் மற்றும் சக அணியினர் செல்லவில்லை. ஹசன் நேரடியாக நடுவரிடம் சென்று மீண்டும் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்புகளையும் பிடுங்கி தரையில் வேகமாக எரிந்தார். அதன்பிறகு நடுவரிடம் ஆக்ரோஷமாகப் வாக்குவாதம் செய்தார். இந்தக் காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சியில் பதிவாகி இணையத்தில் வைரலானது. இன்னும் ஒரு பந்தை வீசியிருந்தால் போட்டியின் முடிவு தெரிந்திருக்கும். ஆனால் அம்பயர்கள் அதைச் செய்யாததால் ஷகிப் கோபப்பட்டதாக சக வீரரான தமீம் இக்பால் கூறினர். ஆனாலும் ஷகிப் அல் ஹசன் செயல்பாடுகள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கானதல்ல என காட்டமான விமர்சனம் எழுந்தது.

இதனையடுத்து ஷகிப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து "போட்டியின்போது நான் கோபப்பட்டது தவறுதான். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த வீரராக இருந்துகொண்டு இதுபோல் ஆக்ரோஷமாகச் செயல்பட்டிருக்கக் கூடாது. இது அனைத்தும் திடீர் கோபத்தால் தற்செயலாக நடந்த விஷயம். அணி வீரர்கள், நிர்வாகம், நடுவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோல் இனி நடைபெறாது" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com