தொடரும் ஒழுங்கீனம்... - வங்கதேச கிரிக்கெட் அணியும், ஷகிப் அல் ஹசனும் திருந்துவது எப்போது?

தொடரும் ஒழுங்கீனம்... - வங்கதேச கிரிக்கெட் அணியும், ஷகிப் அல் ஹசனும் திருந்துவது எப்போது?
தொடரும் ஒழுங்கீனம்... - வங்கதேச கிரிக்கெட் அணியும், ஷகிப் அல் ஹசனும் திருந்துவது எப்போது?

கிரிக்கெட் என்பது 'ஜென்டில்மேன்' விளையாட்டு. ஆனால் ஷகிப் அல் ஹசன் மட்டுமல்லாமல், வங்கதசே வீரர்கள் பலரும் அதனை பின்பற்றியதில்லை. இந்த ஒழுங்கீன வரலாற்றின் சுவடுகளும், சமீபத்திய சர்ச்சைகளும் இதோ...

1977-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது வங்கதேச கிரிக்கெட் அணி. ஆனால், 1996-ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களது முத்திரைய பதிக்க ஆரம்பித்தது அந்த அணி. பின்பு பல போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா, ஆஸ்திரேலிய போன்ற அணிகளைத் திணறடிக்கும் வீரர்களை மெதுவாக உருவாக்கியது வங்கதேசம். அதன் பலனாக 2000-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அங்கீகாரம் கொடுத்தது ஐசிசி. அதன்பின்பு கத்துக்குட்டியாக பார்க்கப்பட்ட வங்கதேசம் விஸ்வரூபம் எடுத்தது.

அதுவும் 2007 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி, தொடரில் இருந்தே வெளியேற்றியது வங்கதேசம். பின்பு 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவுடன் இணைந்து நடத்தியது வங்கதேசம். அந்த அணியின் தமீம் இக்பால், முஷ்பிகிர் ரஹீம் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக உருவானார்கள். அதில் உலகளவில் பல நாடுகளை கவனம் ஈர்த்தவர், ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன். வங்கதேச அணியின் 'மேட்ச் வின்னராக' ஆக ஜொலிப்பவர் ஷகிப் அல் ஹசன். ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் சில மாதங்கள் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார்.

ஐபிஎல் போட்டிகளிலும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றன கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள். இப்போதும் ஐபிஎல்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் ஷகிப் அல் ஹசன். 34 வயதாகும் ஷகிப் அல் ஹசன் 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 212 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6455 ரன்களை சேர்த்துள்ள வங்கதேசத்தின் ஸ்டார் வீரர். மேலும், 57 டெஸ்ட் போட்டிகளிலும் 76 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அனைத்துவிதமான கிரிக்கெட் பார்மட்களிலும் ஷகிப் அல் ஹசன் கில்லி.

கிரிக்கெட் ரெக்கார்டுகள் சிறப்பாக இருந்தாலும் ஷகிப் அல் ஹசனின் நடவடிக்கைகள்தான் இதுவரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாக பேசவைத்திருக்கிறது. இப்போது கூட வங்தேச டி20 கிரிக்கெட் லீகில் அம்பயரிடம் வாக்குவாதம் செய்து, ஒரே போட்டியில் இருமுறை வாக்குவாதம் செய்து, ஸ்டம்புகளை தூக்கி எரிந்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியில் இருந்தாலும், ஷகிப் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சர்ச்சையில் சிக்குவது ஷகிப் அல் ஹசனுக்கு ஒன்றும் புதிததல்ல.

இதற்கு முன்பு போட்டியின்போது அவுட்டாகி பெவிலியன் திரும்பிய ஷகிப், தொலைக்காட்சி கேமரா தன்னை படம் பிடித்தபோது அறுவறுப்பான முறையில் செய்கை செய்தார். இதனால் கடுமையான கண்டனங்ளுக்கு ஆளானார். இதற்கு பின்பு கடந்த 2018ஆம் ஆண்டு வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாவே இடையே நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஷகிபை மேட்ச் ஃபிக்சிங் செய்ய இடைத்தரகர்கள் அனுகியுள்ளனர். அதேபோல 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போதும் இவரை மேட்ச் ஃபிக்சிங் செய்ய இடைத்தரகர்கள் அனுகியுள்ளனர்.

இந்த இரண்டு முறையும் இடைத்தரகர்கள் தன்னை அனுகியது தொடர்பாக ஷகிப் அல் ஹசன் ஐசிசிக்கு தெரிவிக்கவில்லை. எனவே ஐசிசியின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளை ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பதாக அறிவித்தது. எனினும், ஷகிப் அல் ஹசன் தனது தவறை ஒப்புக்கொண்டதால் அவரின் தடைக் காலத்தை ஒராண்டாக குறைத்து ஐசிசி உத்தரவிட்டது. இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓராண்டு விளையாடாமல் இருந்தார் ஷகிப் அல் ஹசன்.

கிரிக்கெட் என்பது "ஜென்டில்மேன்" விளையாட்டு, ஆனால் ஷகிப் மட்டுமல்லாமல் வங்கதசே வீரர்கள் பலரும் அதனை பின்பற்றியதில்லை.

வெற்றியோ தோல்வியோ எதிரணியினரை கண்ணியமாக நடத்த வேண்டும்; அதுதான் ஒரு உண்மையான விளையாட்டு அணிக்கான அடையாளம். ஆனால் அதனையும் சரியாக பின்பற்றாத அணியாக வங்கதேசம் கிரிக்கெட் இருந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்ற டி20 தொடரில் ஒரு போட்டியில் இலங்கையை வென்ற வங்கதேச கிரிக்கெட் அணியினர் "பாம்பு நடனம்" ஆடி இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினர். மேலும் இலங்கை வீரர்களுடன் தரக்குறைவாகவும் நடந்துக்கொண்டனர். அண்மையில் கூட இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த முஷ்பிகிர் ரஹீம் மீண்டும் பாம்பு டான்ஸ் ஆடினார்.

எப்போதும் கிரிக்கெட்டில் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூல் தோனியை கூட
டென்ஷன் ஆக்கி வாங்கிக்கட்டி கொண்டார்கள் வங்கதேச வீரர்கள். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் தோனி - ரோகித் சர்மா ரன்களை சேர்க்கும்போது அடிக்கடி குறுக்கே வந்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்த தோனி, முஸ்தாபிசுர் ரஹ்மானை லேசாக தோளில் இடித்தார். இதனை எதிர்பார்க்காத அவர் கீழே விழுந்தார். இதுவும் அப்போது பெரும் பேசுபொருளானது. கிரிக்கெட்டில் வெல்கிறார்களோ இல்லையோ சர்ச்சைக்கும் வங்கதேசத்துக்கும் நன்றாகவே பொருந்திப் போகிறது.

சர்வதேசப் போட்டிகள், உள்ளூர் போட்டிகள் என பிரச்னைகள் நீண்டுக்கொண்டே இருக்கிறது. அம்பயரிடம் நடந்துக்கொண்ட விதத்துக்கு எளிதாக மன்னிப்பு கேட்டுவிட்டார் ஷகிப். ஆனால் அவரது மனைவி "ஷகிபை ஊடகங்கள் வில்லன் போல் சித்தரிப்பதாக கூறியுள்ளார். இதனை தட்டிக் கேட்க வேண்டிய வங்கதேச கிரிக்கெட் வாரியம் வாயை மூடிக்கொண்டு இருக்கிறது” என்கிறார்.

ஓர் அணி வெற்றிப் பெறுவதோ தோல்வியடைவதோ முக்கியமல்ல; ஆட்டத்தின்போது கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் ஒட்டுமொத்த வங்கதேசத்துக்கும் ஷகிப் அல் ஹசன் ஒரு இன்ஸ்ரபிரேஷன், அவர் இப்படி செய்வது கவலைக்குரியது. ஷகிபுக்கு மட்டுமல்ல; இப்போது வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தேவைப்படுவது வெற்றியல்ல; நல்ல ஆலோசனையும் வழிக்காட்டுதலும்தான்.

- ஆர்.ஜி.ஜெகதீஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com