கடைசி பந்துவரை போராடி இதயங்களை வென்ற சஞ்சு சாம்சன்.. இந்திய அணி தோற்றது எப்படி?

கடைசி பந்துவரை போராடி இதயங்களை வென்ற சஞ்சு சாம்சன்.. இந்திய அணி தோற்றது எப்படி?
கடைசி பந்துவரை போராடி இதயங்களை வென்ற சஞ்சு சாம்சன்.. இந்திய அணி தோற்றது எப்படி?

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி லக்னோவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.

மழையின் காரணமாக ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்க் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் சீரான தொடக்கத்தை கொடுத்தனர். நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்த டிகாக் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். 110க்கு 4 விக்கெட்டுகள் இருந்த போது 5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். கடைசிவரை நிலைத்து நின்று ஆடியவர்கள் 40 ஓவர் முடிவில் அணிக்கு 249 என்ற நல்ல அணி ஸ்கோரை சேர்த்தனர்.

250 ரன்கள் பெற்றால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 8 ரன்கள் இருந்த போது அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட் சரிவை சரிகட்ட முயன்ற ருதுராஜ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சீரான ரன்களை கொடுத்தாலும் அணி 48 ரன்கள் எடுத்திருந்த போது அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றிக்கான இலக்கை துறத்தினர். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் விளாசி 50 ரன்களில் இங்கிடி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகுர் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து நம்பிக்கை அளித்தாலும் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சஞ்சுசாம்சனுக்கு கைக்கொடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதி வரை களத்தில் நின்ற சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற இடத்தில் முதல் 3 பந்துகளில் 6, 4, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி தென்னாப்பிரிக்கா அணிக்கு பயத்தை கொடுத்தார். நான்காவது பந்தை டாட்டாக வீசிய ஷாம்சி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தியது. கடைசிவரை அணியின் வெற்றிக்காக போராடிய சஞ்சு சாம்சன் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டத்தில் 37 ஆவது ஓவர் வரை இந்திய அணிக்காக வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் அதாவது 18 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கிட்டதட்ட ஒரு ஓவருக்கு 15 ரன்கள். களத்தில் 62 ரன்களுடன் சஞ்சு சாம்சனும், 33 ரன்களுடன் ஷர்துல் தாக்கூரும் இருந்தனர். ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் கதையே மாறிவிட்டது. 38வது ஓவரில் முதல் பந்தில் ஒரு பவுண்டரியும் அடுத்த பந்தில் ஒரு சிங்கிளும் சஞ்சு சாம்சன் எடுத்தார். அவர் அடுத்த 10 பந்துகளை சந்திக்கவே இல்லை. குறிப்பாக 39வது ஓவரில் அவர் ஒரு பந்துகூட சந்திக்கவில்லை. 38வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு விக்கெட் வீழ்ந்தது. 39வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஒரு விக்கெட் வீழ்ந்தது. இதனால், கடைசி ஓவரில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. 

கடைசி வரை போராடி இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றார் சஞ்சு சாம்சன். 51 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ஒரு வகையில் இது கௌரவமான தோல்விதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com