’யோ-யோ’வில் தோல்வி: ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்!
’யோ - யோ’ உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால், இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. அங்கு மூன்று டி20 தொடர், மூன்று ஒரு நாள் போட்டி, 5 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு விளையாடுகிறது. அதற்கு முன்பாக, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. ஜூன் 27 மற்றும் 29-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடக்கிறது.
டி20, ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய ’ஏ’ அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் யோ யோ உடல் தகுதி தேர்வு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றால் மட்டுமே அணியில் இடம்பெற முடியும் என்பதால் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யோ யோ உடல் தகுதி தேர்வில் தேர்வு பெறவில்லை. அவரது ஸ்கோர், பரிந்துரைக்கப்பட்ட 16.1- என்கிற அளவுக்கும் குறைவாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு எந்த வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்கிற விவரம் வெளியாகவில்லை. திருவனந்தபுரத்தை சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக் காக சிறப்பாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுடனான முத்தரப்புத் தொடரில் வரும் 22-ம் தேதி பங்கேற்கிறது.