அதே டீம், அதே வெறித்தனம்...! அப்படியே கோலியை நகலெடுத்த ஜெமிமாவின் வீடியோவை பகிர்ந்த ICC

அதே டீம், அதே வெறித்தனம்...! அப்படியே கோலியை நகலெடுத்த ஜெமிமாவின் வீடியோவை பகிர்ந்த ICC
அதே டீம், அதே வெறித்தனம்...! அப்படியே கோலியை நகலெடுத்த ஜெமிமாவின் வீடியோவை பகிர்ந்த ICC

கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது தன்னித்துவமான ஆட்டத்தை எடுத்து வந்து உலக கிரிக்கெட்டை மிரட்டிய விராட் கோலியை போன்றே, மீண்டும் அதே மாதிரியான ஆட்டத்தை மகளிர் டி20 உலகக்கோப்பையில் கண்முன் கொண்டுவந்து அசத்திருக்கிறார் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

இரண்டு வீரர்களிடமும் இருந்த சில ஒரே மாதிரியான ஷாட்களை ஐசிசி அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோவை பகிர்ந்து வரும் இந்திய ரசிகர்கள், இரண்டு வீரர்களின் ஒரே மாதிரியான பேட்டிங்கை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரானது தென்னாப்பிரிக்காவில், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்டு வரும் 26ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையை போன்றே, மகளிர் டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவிற்கான முதல் போட்டியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே தொடங்கப்பட்டது. இதனால் மகளிர் அணிகளுக்கான இந்தியா-பாகிஸ்தான் போட்டியும், ஆண்களுக்கான போட்டியை போலவே பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா-பாகிஸ்தான் போட்டி!

இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடக்க ஆட்டக்காரர்களை சொற்ப ரன்களில் வெளியேற்றி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 12 ஓவரில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை கேப்டன் மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் இருவரும் சரிவிலிருந்து மீட்க போராடினர்.

ஒருபுறம் கேப்டன் மரூஃப் நிலைத்து நின்று விளையாட, மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயிஷா 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் மரூஃப் அரைசதத்தை பதிவு செய்து 68 ரன்கள் சேர்த்து, பாகிஸ்தான் அணியை 149 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.

விராட் கோலியை போலவே நம்பர் 3 வீரராக இறுதிவரை நின்று விளையாடிய ஜெமிமா!

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். யஸ்திகா பாட்டியா 17 ரன்களில் வெளியேற, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வெர்மா 33 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் விரைவாகவே அவுட்டாகி வெளியேற, போட்டியை கடைசி வரை எடுத்துசெல்ல முடிவு செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஸ் இருவரும் சிறப்பான கூட்டணியை அமைத்தனர்.

சரியான நேரத்தில் பவுண்டரிகளாக அடித்து விளாசிய ஜெமிமா, கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் கைகளில் இருந்து வெற்றியை இந்தியாவின் வசம் கொண்டுவந்தார். வெற்றிக்கு தேவையான ரன்களை அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து, இந்தியாவின் அதிகபட்ச சேஸிங்கை பதிவு செய்ய உதவினார் ஜெமிமா. 19ஆவது ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்து இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

19ஆவது ஓவர் கடைசி 2 பந்துகளில் கோலியை போலவே 2 பவுண்டரிகளை அடித்த ஜெமிமா!

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் வரலாற்று வெற்றிக்கான ஆட்டத்தையும், ஜெமிமாவின் வரலாற்று வெற்றிக்கான ஆட்டத்தையும் ஒப்பிட்டு ஐசிசி, அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், விராட் கோலியை போலவே ஜெமிமாவும் ஆஃப் சைடுகளில் இரண்டு பவுண்டரிகளையும், லெக் சைடில் நகர்ந்து வந்து அடிக்கும் இரண்டு பவுண்டரிகளும் பார்ப்பதற்கு அப்படியே நகலெடுத்தது போல பொறுந்திப்போய் உள்ளது. மேலும் வெற்றிக்கு பிறகு விராட் கோலியின் அதே கொண்டாட்டத்தை போலவே, ஜெமிமாவும் அச்சு அசலாக வெளிப்படுத்தியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

A post shared by ICC (@icc)

விராட் கோலி மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இரண்டு பேரின் இந்த வெற்றியும் கொண்டாடப்படவேண்டிய வெற்றியாகும். அதில் சந்தேகமேயில்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com