மகனை இழந்த சோகத்தில் ரொனால்டோ - ஆறுதல் பாடலை பாடிய எதிரணி ரசிகர்கள்

மகனை இழந்த சோகத்தில் ரொனால்டோ - ஆறுதல் பாடலை பாடிய எதிரணி ரசிகர்கள்

மகனை இழந்த சோகத்தில் ரொனால்டோ - ஆறுதல் பாடலை பாடிய எதிரணி ரசிகர்கள்
Published on

மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் இடையிலான போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆட்டத்தின் “7”வது நிமிடத்தில் மகனை இழந்த ரொனால்டோவுக்காக “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” என்ற பாடலை பாடியதற்கு ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. அவரது காதலி ஜார்ஜினாவுக்கு அண்மையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதில் ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக ரொனால்டோ தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்தார். இதனால் அவர் அடுத்ததாக நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் இடையிலான பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மைதானமும் ரொனால்டோவுக்கு ஆறுதலாக பாடலைப் பாடியது.

மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ரொனால்டோவின் ஜெர்சி எண் “7”. இந்த எண்ணுடன் இணைத்து ரொனால்டோ பலமுறை பேசப்பட்டிருக்கிறார். கால்பந்தை பொறுத்தவரை இந்த “7” ரொனால்டோவின் ட்ரேட்மார்க் ஆக இருக்கிறது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் அணிகள் இடையே போட்டி துவங்கிய 7வது நிமிடத்தில் மைதானத்தில் இருந்த இரு அணிகளின் ரசிகர்களும் எழுந்து நின்றனர். “Viva Ronaldo” (ரொனால்டோ வாழ்க) என்று மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் பாடத் துவங்கினர்.

அவர்களுடன் லிவர்பூல் ரசிகர்களும் சேர்ந்து, “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” (You will never walk alone) என்ற பாடலை அனைவரும் ஒருசேர பாடத் துவங்கினர். அரங்கம் அதிர கைதட்டல்களுடன் ரசிகர்கள் பாடலை பாடினர். கிட்டத்தட்ட 66 வினாடிகள் பாடலை ரசிகர்கள் பாடினர். ரசிகர்களின் இந்த செயலுக்கு ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு உலகம்... ஒரு விளையாட்டு... ஒரு உலகளாவிய குடும்பம்! நானும் எனது குடும்பத்தினரும் இந்த மரியாதை மற்றும் இரக்கத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்! நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

Shared post on

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com