’சின்னத் தல’யின் 75 வீண்: சிஎஸ்கே-வை பழிதீர்த்தது மும்பை

’சின்னத் தல’யின் 75 வீண்: சிஎஸ்கே-வை பழிதீர்த்தது மும்பை

’சின்னத் தல’யின் 75 வீண்: சிஎஸ்கே-வை பழிதீர்த்தது மும்பை
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி எளிதாக வெற்றிபெற்றது. 

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்றிரவு மோதின. புனேயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்ட்டும் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஷூர் ரகுமானும் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டுமினி, பென் கட்டிங் சேர்க்கப்பட்டிருந்தனர். சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரா்கள் அம்பதி ராயுடுவும், ஷேன் வாட்சனும் தடுமாற்றத்துடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். வாட்சன் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, குணால் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து சுரேஷ் ரெய்னா, ராயுடுவுடன் இணைந்தார். ராயுடு வழக்கம் போல அடித்து ஆடத் தொடங்கியதும் ரன் ரேட் ஏறத் தொடங்கியது. ஆனால் அதே நேரம் மும்பையின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. வாட்சனை தூக்கிய குருணால் பாண்டியா, அடுத்து ராயுடுவையும் தனது ஸ்லோபால் மேஜிக்கில் வீழ்த்தினார். அவர் 35 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். 

அடுத்து வந்த கேப்டன் தோனி, அடித்து ஆட நினைத்தார். ஆனால், மும்பை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிப்பது கஷ்டமாக இருந்தது. அவர் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த போது மெக்லனஹன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அதிரடி ஆல்ரவுண்டர் பிராவோ வந்தார். மும்பையுடனான முந்தைய போட்டியில் மிரட்டிய அவர் இந்தப் போட்டியிலும் கலக்குவார் என்று எதிர்பார்த்தால், அடுத்த பந்திலேயே மெக்லனஹன் அவரை ஆட்டமிழக்க வைத்தார். ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் இறங்கிய சாம் பில்லிங்ஸ் 3 ரன்னில் அவுட் ஆனார். ஒத்தையில போராடிய ’சின்ன தல’ ரெய்னா, 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன்  75 ரன்கள் குவித்தார். சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.

மும்பை அணியின் குணால் பாண்டியா, மெக்லனஹன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் எடுத்தார். 

பின்னர் களமிறங்கிய மும்பை அணி, முதலில் நிதானமாக, விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடியது. சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியானார். அடுத்து கேப்டன் ரோகித் வந்தார்.

மறு முனையில்,  பொறுமையாக அடிக்கொண்டிருந்த லெவிஸ் 47 பந்துகளில் ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்டியா வந்தார். அவரும் ரோகித்தும் அதிரடி காட்டினர். சென்னை அணியின் பந்துவீச்சை எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் தூக்கி அணியை வெற்றி பெற வைத்தனர். மும்பை அணி, 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 33 பந்தில் 56 ரன்கள் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் பெற்ற தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது மும்பை.  


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com