விளையாட்டு
தோனி, கங்குலியின் கலவைதான் ரோகித் சர்மா: இர்பான் பதான்
தோனி, கங்குலியின் கலவைதான் ரோகித் சர்மா: இர்பான் பதான்
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் மும்பை அணி ஒரு கோப்பையையும் வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை.
ஆனால் மும்பை அணியில் ரோஹித் ஷர்மா வருகைக்குப் பிறகு அந்த அணியின் அடையாளமே மாறிவிட்டது. 2013-ல் ஆரம்பித்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5-வது முறையாக கோப்பையை வென்றுத்தந்த பிறகு ரோகித் ஷர்மாவின் பதற்றமில்லா சாதுர்யமான கேப்டன்ஷிப் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர், மைக்கேல் வாகன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
“இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன்களில் இருவரான தோனி மற்றும் கங்குலியின் கலவை தான் ரோகித். கங்குலி தனது பந்து வீச்சாளர்களை நம்பி அதன் வழியாக சென்றார். தோனி தனது பந்து வீச்சாளர்களை நம்பினார், ஆனால் எப்போதும் ஒரு உள்ளுணர்வுடன் முடிவுகளை எடுத்தார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா, யாதவை பயன்படுத்திய விதம் அவரது கேப்டன்ஷிப்பை காட்டியது. அவர் தனது உள்ளுணர்வைப் பயன்படுத்தினார். அவரது சிந்தனை எவ்வளவு தெளிவாக இருந்தது என்பதை இது காட்டுகிறது. அவர் ஒரு பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்பதை இது உணர்த்துகிறது'' என்று இர்பான் பதான் கூறினார்.