மொட்டை மாடி டென்னிஸ்: சிறுமிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஜர் பெடரர்!!
இத்தாலியைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனைகளான விட்டோரியாவும், கரோலாவும் ஊரடங்கு காலத்தில் தங்களது தீராத விளையாட்டு மோகத்தினால் வீட்டின் மொட்டை மாடியை டென்னிஸ் கோர்ட்டாக மாற்றி விளையாடினர். அவர்கள் இருவரும் மொட்டை மாடியில் டென்னிஸ் விளையாடும் வீடியோ கடந்த ஏப்ரலில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன. அதோடு உலகம் முழுவதும் ‘ரூஃப் டாப்’ என பிரபலமாகியிருந்தது.
ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ரூஃப் டாப் டென்னிஸ் விளையாடினர். பிரபலங்கள் துவங்கி சாமானியர்கள் வரை அனைவருக்கும் இதை சாத்தியமாக்கினார்கள் விட்ட்டோரியாவும், கரோலாவும்.
இந்த சூழலில் அவர்கள் இருவரையும் நேரடியாக சந்தித்து, அவர்களோடு இணைந்து ரூஃப் டாப் டென்னிஸ் விளையாடியுள்ளார் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தாலிய உணவு பிராண்டான ‘பாரிலா’ பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த வீராங்கனைகள் இருவரும் ரூஃப் டாப் டென்னிஸ் குறித்து தங்கள் அனுபவங்களை அதில் பகிர்ந்துள்ளனர். அதோடு அவர்கள் இதற்காக உலகளவில் வைரலாக பேசப்படுவார்கள் என ஒரு போதும் எண்ணியதில்லை என தெரிவித்துள்ளார்கள். டென்னிஸ் விளையாட்டில் தங்களுக்கு பிடித்த வீரர் ரோஜர் பெடரர் தான் எனவும் அதில் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் இருவருக்கும் தெரியாமல் இதை கேட்ட ரோஜர் பெடரர் திடீரென அவர்கள் முன்பு வந்து நின்று ஆச்சரியப்படுத்துகிறார்.
அவர்கள் இருவரோடும் மொட்டை மாடியில் டென்னிஸ் விளையாடிய பிறகு பாஸ்தா சாப்பிட்டு விட்டு விடை பெறுகிறார்.
‘உலகின் பல இடங்களில் நான் டென்னிஸ் விளையாடியுள்ளேன். ஆனால் இது எனக்கு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம் என்பதை இதன் மூலம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளோம். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’ என மொட்டை மாடியில் டென்னிஸ் விளையாடிய அனுபவத்தை ரோஜர் பெடரர் பகிர்ந்துள்ளார்.
பெடரர் மொட்டை மாடியில் விளையாடும் இந்த வீடியோவை சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.