சரிந்த அணியை சதம் விளாசி மீட்ட ரிஷப் பந்த் - குஷியான டெல்லி ரசிகர்கள்

சரிந்த அணியை சதம் விளாசி மீட்ட ரிஷப் பந்த் - குஷியான டெல்லி ரசிகர்கள்

சரிந்த அணியை சதம் விளாசி மீட்ட ரிஷப் பந்த் - குஷியான டெல்லி ரசிகர்கள்
Published on

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 187 ரன்கள் குவித்தது. டெல்லி வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக சதம் அடித்து சரிந்த அணியை தனி ஆளாக மீட்டார். 

ஐதராபாத் அணிக்கு இந்தப் போட்டியின் வெற்றி அவ்வளவு முக்கியமானது அல்ல. ஆனால், டெல்லி அணி கிட்டத்தட்ட போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அடுத்து உள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மிக, மிக குறைவான வாய்ப்பு உள்ளது. அதுவும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தது. அப்படி இக்கட்டான நிலையில்தான் டெல்லி அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஷா 9, ராய் 11 என ஷகிப் அல் ஹாசன் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயரும் 3 ரன்களில் ரன் அவுட் ஆகினார். இதனால், டெல்லி அணி 7.4 ஓவரில் 43 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ரிஷப் பந்துடன் சிறிது நேரம் நிலைத்து ஆடிய பட்டேலும் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், பந்த் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். 

36 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 56 பந்துகளில் சதம் விளாசினார். ரிஷப் பந்தின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. கடைசி ஓவரில் மட்டும் பந்த் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய பந்த் 63 பந்துகளில் 128 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். 

சன்ரைசர்ஸ் அணியில் ஷகிப் அல் ஹாசன் 4 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்த புவனேஸ்வர் குமார், 4 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது ஆகும். இதற்கு முன்பாக வாட்சன் 106, கெயில் 104 ரன்கள் எடுத்திருந்தனர். அதேபோல், இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் முதலிடத்திற்கு வந்துள்ளார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 521 ரன்கள் எடுத்துள்ளார். 

இதனையடுத்து ஐதராபாத் அணி 188 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வருகிறது. அந்த 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து அந்த அணி விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com