அதிகாலை என் வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டார் ரிஷப் பன்ட் என்று அவரது பயிற்சியாளர் தாரக் சின்ஹா தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.
இது குறித்து "கிரிக்கெட் நெக்ஸ்ட்" இணையதளத்துக்கு பேசிய அவர் " ரிஷப் பன்ட் டெல்லியின் புகழ்ப்பெற்ற சன்னெட் கிளப்பில் பயிற்சி பெற்று வந்தார். ஒருநாள் வலைப்பயிற்சியின்போது அவர் சரியாக விளையாடவில்லை. நான் சொல்லும் விதத்தில் அவர் செயல்படவில்லை. இதனால் நான் மிகவும் அதிருப்தியடைந்தேன். இது ரிஷப் பன்ட்க்கு நன்றாகவே தெரியும். பின்பு நான் வீடு திரும்பிவிட்டேன்" என்றார் தாரக் சின்ஹா.
மேலும் பேசிய அவர் "நான் என்சிஆர் பகுதியின் வைஷாலியில் வசிக்கிறேன். திடீரென அதிகாலை 3.30 மணிக்கு என் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்துபோது ரிஷப் பன்ட் நின்றுக்கொண்டு இருந்தார். வந்தவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். சரியாக விளையாடததால் தன்னால் தூங்க முடியவில்லை, நீங்கள் என் மீது அதிருப்தியாக இருக்கவே மன்னிப்பு கேக்க வந்ததாக ரிஷப் பன்ட் கூறினார்" என்றார் தாரக் சின்ஹா.
தொடர்ந்து பேசிய அவர் "ரிஷப் பன்ட் டெல்லியில் வசிக்கிறார். அந்த அதிகாலையில் அத்தனை தூரம் என்னை சந்திக்க வந்த அவரின் மனதை புரிந்துக்கொண்டேன். ரிஷப் பன்ட்டின் இந்தச் செய்கை என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அவர் மீது அத்தனை கடுமையாக நடந்திருக்க கூடாது என்பதை உணர்ந்தேன்" என்றார் தாரக் சின்ஹா.