'இந்திய அணியை கவுன்சிலில் இருந்து நீக்குங்கள்' -பாக். முன்னாள் கேப்டன் காட்டம்

'இந்திய அணியை கவுன்சிலில் இருந்து நீக்குங்கள்' -பாக். முன்னாள் கேப்டன் காட்டம்
'இந்திய அணியை கவுன்சிலில் இருந்து நீக்குங்கள்' -பாக். முன்னாள் கேப்டன் காட்டம்

பாகிஸ்தானிடம் தோற்றால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இந்திய அணி பயப்படுகிறது என விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட்.

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு இடையே நல்லுறவு இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அணியின் முன்னாள் கேப்டன்  ஜாவேத் மியான்டட் காட்டமாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், ''பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா ஏன் இவ்வளவு பயப்படுகிறது? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்பது பிசிசிஐ-க்கு தெரியும். அதனால் தான் இப்படி பயப்படுகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்திற்கு தான் அவர்கள் செல்வார்கள். உரிமைக்காக நிச்சயம் குரல் கொடுத்தே தீர வேண்டும். எதற்காகவும் நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவை நம்பி நாங்கள் இல்லை. எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டே தீர வேண்டும். அனைத்து வாரியங்களையும் கட்டுப்படுத்துவதற்கு தான் ஐசிசி உள்ளது.

ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு அனைத்து அணிகளும் சென்று விளையாட வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் தான். ஆனால் இந்தியா இதுபோன்று வரமுடியாது எனக் கூறிக்கொண்டு இருந்தால் இந்தியாவை கவுன்சிலில் இருந்து நீக்கிவிட வேண்டும், அவர்கள் தேவையே இல்லை என ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com