"ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது" - சஞ்சய் மஞ்சரேக்கரின் 'சாட்'டை வெளியிட்ட நபர்

"ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது" - சஞ்சய் மஞ்சரேக்கரின் 'சாட்'டை வெளியிட்ட நபர்
"ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது" - சஞ்சய் மஞ்சரேக்கரின் 'சாட்'டை வெளியிட்ட நபர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தரக்குறைவாக பேசியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியாது என ஏளனம் செய்ததாக சமூகவலைத்தனமான ட்விட்டரில் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருடன் தான் செய்த சாட்டை நபர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளிலும், 74 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள மஞ்சரேக்கர் அவ்வப்போது முன்வைக்கும் விமர்சனங்களும், கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகும். இந்திய அணியின் ராக் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஜடேஜா குறித்து பாகுபாடு கலந்த வர்ணனை செய்ததற்காக ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளாகியிருந்தார் மஞ்சரேக்கர்.

அண்மையில் கூட அவர் வெளியிட்ட ஆல் டைம் பெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினின் பெயர் இல்லை. அதற்கு மஞ்சரேக்கர் கூறிய காரணங்களும் சர்ச்சையானது. இதனால் மீண்டும் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் அவர். பதிலுக்கு அஷ்வின் மீம் ஒன்றை நகைச்சுவையாக பதிவிட்டு சர்ச்சையை முடித்து வைத்தார். இவையெல்லாம் ஓய்ந்த நிலையில் ட்விட்டரில் சூர்யநாராயணன் என்பவர் மஞ்சரேக்கருடன் செய்த சாட் பதிவை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

சஞ்சய் மஞ்சரேக்கர் அந்த சாட்டில் அந்த நபரிடம் ஜடேஜா தொடர்பாக நிறைய வாதாடிருக்கிறார், அதற்கு பதிலளித்துள்ள அவர் "உங்களைப் போல நானும் வீரர்களை வழிபாடு செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். நான் ரசிகன் இல்லை, நான் ஒரு கிரிக்கெட் விமர்சகர், ஆய்வு செய்பவன். பின்பு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் நான் சொன்னது அவருக்கு புரியவில்லை. எனக்கு அவர் அளித்த பதில் கூட வேறுயாராவது ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்து இருப்பார்கள்" என கூறியுள்ளார்.

இதனை "ஸ்க்ரீன் ஷாட்" எடுத்த அந்த நபர் இதனை பிசிசிஐ மற்றும் சவுரவ் கங்குலியை டேக் செய்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில் "இந்த தனிப்பட்ட முறையான உரையாடலை நான் பொது வெளிக்கு கொண்டு வரக்கூடாது என்றே நினைத்தேன். ஆனால் இந்த மனிதரின் மறுப்பக்கம் தெரிய வேண்டும் என்பதற்காகவே இதை பகிர்கிறேன். ஜடேஜாவை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, சஞ்சய் நினைத்தது தவறு என நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். பிசிசிஐ எதிர்காலத்ததில் கூட இதுபோன்ற நபர்களை வர்ணனையாளர் குழுவில் சேர்க்க கூடாது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com