ரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்!

ரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்!

ரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

கடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில் பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின. 

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா (34 ரன்), தவான் (34), அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் (3 ரன்கள்) ஆகியோர்கள் அவுட் ஆனதும் அந்த அணி தடுமாறத் தொடங்கியது. 150 ரன்களைத் தொடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் ரஷித் கான் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார். அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். பத்து பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது.

பின்னர் 175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரேனும் அதிரடியாக விளையாடினர். இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிஷ் ராணா (22 ) உத்தப்பா (2) கேப்டன் தினேஷ் கார்த்திக் (8) ரஸல் (3) என அடுத்தடுத்து அவுட் ஆகி நம்பிக்கையை தகர்த்தனர்.

இருந்தாலும் இளம் வீரர் சுப்மன் கில் கொஞ்சம் ஆறுதல் அளிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் கடைசி ஓவரில் அவர் விக்கெட்டை இழந்ததும் கொல்கத்தா அணி, ஐதராபாத் அணியிடம் சரண்டர் ஆனது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கொல்கத்தா அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது. ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்ரவுண்டராக ஜொலித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணியுடன் 3 முறை மோதியுள்ள ஐதராபாத் அணி மூன்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com