15 ஆண்டுகளாக நேருக்கு நேர் களம் கண்டு வரும் டென்னிஸ் வீரர்கள் ரஃபேல் நடால் மற்றும் ஃபெடரர் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நேரலையில் சந்தித்துக்கொண்டது அவர்களது ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளில் இயல்பு நிலை முடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா உட்பட உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சினிமா சூட்டிங், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் வீட்டிலேயே நாட்களை கழித்து வருகின்றனர். சில நேரங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும், அரட்டை வீடியோக்களையும் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்டும் வருகின்றனர்.
இக்காலத்தில் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் முடிந்தவரை ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள். அந்த வகையில், டென்னிஸ் வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஃபெடரர் இன்ஸ்டாகிராமில் அடித்த அரட்டையை ரசிகர்கள் கண்டு ரசித்தனர். 15 ஆண்டுகளாக நேருக்கு நேராக களம் கண்ட டென்னிஸ் வீரர்கள் ரஃபேல் நடால் மற்றும் ஃபெடரர் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நேரலையில் சந்தித்துக்கொண்டது அவர்களது ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியது.