இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமன ஆணையை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
2016- ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் பி.வி.சிந்துவுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை நேற்று வழங்கினார். சிந்து 30 நாட்களில் பணியில் சேர வேண்டும் எனவும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் துணை கலெக்டர் பணியில் அமர்ந்தாலும், என் கவனம் விளையாட்டில்தான் இருக்கும். பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன்'. என்றும் தெரிவித்தார்.