இந்திய அணியில் அதிரடி மாற்றம் - முரளி விஜய், குல்தீப் வெளியேற்றம்
அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தவிர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதுதான். விராட் கூட இரண்டாவது போட்டியில் ரன் குவிக்கவில்லை. இதனால், இரண்டாவது, மூன்றாவது போட்டியின் ஆடுலெவனில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன.
குறிப்பாக மூன்றாவது போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா களமிறக்கப்பட்டார். அதேபோல், விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் மீண்டும் களமிறங்கினார்.
இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளுக்காக 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக 18 வயதுடைய இளம் வீரர் பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரித்வி ஷா முதல் தர போட்டியில் ஏழு சதம், 5 அரைசதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 56.72 ஆகும். சமீபத்தில் பெக்கென்ஹாமில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் அவர் 188 ரன்கள் எடுத்தார். அதேபோல் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக 62 ரன்கள் எடுத்தார். பெங்களூரில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார்.
விஹாரி இந்தியா ஏ அணியில் 3வது வீரராக களமிறங்கி விளையாடி வந்துள்ளார். இந்த மாதம் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 148 ரன்கள் எடுத்தார்.
அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்)
ஷிகார் தவான்
கே.எல்.ராகுல்
பிரித்வி ஷா
புஜாரா
ரகானே
கருண் நாயர்
தினேஷ் கார்த்திக்
ரிஷப் பண்ட்
அஸ்வின்
ஜடேஜா
ஹர்திக் பாண்ட்யா
இஷாந்த் சர்மா
முகமது சமி
உமேஷ் யாதவ்
பும்ரா
ஷர்துல் தாக்கூர்
ஹனுமா விஹாரி