போராடினார் ரெய்னா, போட்டுத் தாக்கினார் லின்: வென்றது கொல்கத்தா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 10-வது சீசன் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
குஜராத் அணியின் ஜாசன் ராயும், பிரண்டன் மெக்கல்லமும் இன்னிங்ஸை தொடங்கினர். ஜாசன் ராய் 14 ரன்களில் பியுஷ் சாவ்லா பந்துவீச்சில் பதானிடம் கேட்சானார். பிரன்டன் மெக்கல்லம் 35 ரன்களில் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) குல்தீப் யாதவின் ’சைனாமேன்’ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்து இறங்கிய கேப்டன் சுரேஷ் ரெய்னா , நிலைத்து நின்று ஆடினார். யூசுப் பதானின் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை தூக்கிய ஆரோன் பிஞ்ச் (15 ரன்) அடுத்த சிக்சருக்கு முயற்சிக்கையில் எல்லையில் கேட்சாகி, நடையை கட்டினார். பிறகு ரெய்னாவுடன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சேர்ந்தார். தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர சரவெடியில் குஜராத்தின் ஸ்கோர் எகிறியது. அவர் 25 பந்துகளில் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர் விளாசி 47 ரன்கள் எடுத்தார். ஒரு பந்து மீதம் இருக்கையில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. 29-வது அரை சதத்தை கடந்த ரெய்னா 68 ரன்களுடன் (51 பந்து, 7 பவுண்டரி) களத்தில் இருந்தார்.
கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ரெய்னா 12, 50, 58 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை கொல்கத்தா வீரர்கள் நழுவ விட்டதால் தப்பினார் அவர். இல்லையென்றால் அந்த அணி குறைவான ரன்களையே எடுத்திருக்கும்.
அடுத்து ஆடிய கொல்கத்தா அணி அதிரடியில் வெளுத்து வாங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் காம்பீர், கிறிஸ் லின் (ஆஸ்திரேலியா) இருவரும் மட்டையை சுழற்றினர். 6 பவுலர்களை பயன்படுத்தியும் இவர்களைப் பிரிக்க முடியவில்லை. 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 184 ரன்கள் குவித்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். கிறிஸ் லின் 93 ரன்களுடனும் (41 பந்து), கம்பீர் 76 ரன்களுடனும் (48 பந்து) களத்தில் இருந்தனர். லின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.