இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் இருந்து, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு, ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு டெஸ்டில் விளையாடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஜூன் மாதம் தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார் பாண்ட்யா. ’அவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவருக்கு பெரிய அளவில் காயப்பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக, ஓய்வு அளிக்கப்படுகிறது’ என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதோடு ஜனவரியில் நடக்கும் தென்னாப்பிரிக்க தொடருக்கு அவரை பிரெஷ்சாக களமிறக்கும் நோக்கத்திலும் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலில் விளையாடுவார் என அறிவித்துவிட்டு திடீரென்று பணிச்சுமையை காரணம் காட்டி அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அவருக்கு பணிச்சுமை என்பது, போட்டியை திட்டமிடும் கிரிக்கெட் வாரியத்துக்கு முதலிலே எப்படி தெரியாமல் இருந்தது என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

