அப்போ பாக்., வெறியர்.. இப்போ இந்திய ரசிகர்..!
பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகராக அறியப்பட்ட முகமது பஷீர், சாம்பின்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் பிறந்த முகமது பஷீர், தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் எல்லா போட்டியிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஆஜராகி விடுவார். கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எங்கு நடந்தாலும், இந்திய அணியின் சூப்பர் ஃபேனாகக் கருதப்படும் சுதிர் கவுதமுடன், அவர் தவறாமல் ஆஜராகி விடுவதுண்டு. பாகிஸ்தான் அணியின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும், தனக்கு மிகவும் பிடித்த கிர்க்கெட் வீரர் என்று அவர் சுட்டிக்காட்டுவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியைத்தான்.
சமீபகாலமாக பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் - இந்தியா போட்டியின் போது இந்திய அணியை ஆதரிக்கப் போவதாக முகமது பஷீர் தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடங்கி இவ்விரு அணிகள் மோதிய எந்த போட்டியையும் மிஸ் செய்ததே இல்லை என்று கூறும் பஷீர், ஜூன் 4ம் தேதி நடைபெறும் போட்டியில் நேரில் கண்டுகளிக்க முடியாத சூழலில் இருப்பதாக வருத்தத்துடன் கூறுகிறார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகரில் நடக்கும் இந்த போட்டி ரமலான் மாதத்தில் நடப்பதால், குடும்பத்துடன் புனித மெக்கா நகருக்குச் செல்ல இருப்பதாகவும், அதனால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் பஷீர் தெரிவித்தார். அணிகளின் பலம் குறித்து பேசிய பஷீர், இப்போது நடக்க இருப்பது சாதாரணமான இந்தியா-பாகிஸ்தான் போட்டி போல் இல்லை. பாகிஸ்தான் அணியை விட எல்லாவிதத்திலும் இந்திய அணி பலம் பொருந்தியதாக இருக்கிறது என்றும் பஷீர் கூறுகிறார்.