ஹர்திக் பாண்ட்யாவிற்கு பயிற்சியளிக்க தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா உருவெடுத்துவருகிறார். இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுவருகிறார். நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் இவர் 46 ரன்கள் மட்டும் ஒரு விக்கெட் எடுத்தார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பயிற்சியளிக்க நான் தயாராக உள்ளேன் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவை கவனித்து பார்த்தேன். ஹர்திக்கின் பந்துவீச்சில் சில தவறுகள் இருப்பதை கவனித்தேன். குறிப்பாக பந்துவீசும் போது இவரின் கால்கள் சரியான இடத்தில் இல்லை. ஒரு சில நேரத்தில் பந்தை வீசும் போது இவரின் உடலின் சமநிலையும் சரியாக இல்லை. இதனால் இவரின் பந்துவீச்சு சில சமயங்களில் நன்றாக இல்லை.
எனவே இது போன்ற சிறிய தவறுகளை ஹர்திக் திருத்திக்கொண்டால், அவரின் பந்துவீச்சு சிறப்பாக அமையும். இதற்கு பிசிசிஐ அனுமதித்தால் நான் அவருக்கு யூஏஇ போன்ற இடத்தில் கூட வைத்து அவருக்கு பயிற்சியளிக்க தயாராக உள்ளேன். ஹர்திக்கை சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக என்னால் மாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.