யுஸ்வேந்திர சாஹல் தம்பதி விவாகரத்து |ஜீவனாம்சமாக ரூ.60 கோடி? உண்மைத் தகவல் என்ன?
பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை, பஞ்சாப் அணி சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த நிலையில், சாஹலுக்கும் அவருடைய மனைவியும் மருத்துவர் மற்றும் நடன இயக்குநருமான தனஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சாஹல்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்த நிலையில், பின்னர் கணவரின் பெயரை நீக்கி மீண்டும் 'தனஸ்ரீ வர்மா' என மாற்றினார். இதனால் சாஹல் - தனஸ்ரீ வர்மா ஆகியோரின் திருமண வாழ்வு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பிரிந்துவிட்டதாகவும், இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் உறுதியாகி உள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையின்போது, தம்பதியினர் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோருவதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, கடந்த 18 மாதங்களாக தாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், தம்பதியினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் நீதிபதி விவாகரத்து வழங்கினார். இருவரும் சட்டப்பூர்வ விவாகரத்து நடவடிக்கைகளைப் பெற்ற பிறகு, அதுதொடர்பான செய்தியை தங்களது தளங்களில் பதிவிட்டனர்.
இதற்கிடைய, சாஹலிடம் தனஸ்ரீ, ஜீவனாம்சமாக ரூ.60 கோடி கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில் இந்த விவகாரம் குறித்து அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “ஜீவனாம்சம் தொகை குறித்து பரப்பப்படும் ஆதாரமற்ற கூற்றுகளால் நாங்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளோம். அத்தகைய தொகை எதுவும் கேட்கப்படவும் இல்லை; கோரப்படவும் இல்லை; அது, வழங்கப்படவும் இல்லை. இந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்றது.
இது ஊடகங்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும் தேவையற்ற பிரச்னைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செய்தி வெளியிடுவது தீங்கு விளைவிக்கும், மேலும் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு முன்பு ஊடகங்கள் நிதானத்தையும் உண்மைச் சரிபார்ப்பையும் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரின் தனியுரிமையையும் மதிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல் தனஸ்ரீ தரப்பு வழக்கறிஞர்களும் இந்தக் கூற்றை நிராகரித்துள்ளனர். தனஸ்ரீயின் வழக்கறிஞர் அதிதி மோகன், "நடவடிக்கைகள் குறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. இந்த விஷயம் தற்போது நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு முன்பு உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.