இன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
இன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.  ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.  இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

இந்திய அணி, இதற்கு முன் ஆடிய பத்து டி20 போட்டித் தொடர்களை இழந்ததில்லை. அந்த வெற்றிப் பயணத்தை தொடரும் முயற்சியில் இந்திய அணி இருக்கிறது. 2-வது ஆட்டத்தில்  கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அதோடு குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசினர். இதனால் வெற்றி எளிதானது. 

இன்றைய ஆட்டத்திலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம். இன்றைய போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்-கிற்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. 

ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 2 சிக்சர் எடுத்தால், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது அவர் 102 சிக்சர் அடித்துள்ளார். 103 சிக்சர் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு 92 ரன்னில் சுருண்டது இதே மைதானத்தில்தான். என்பதால் இன்றைய போட்டியிலும் நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள். 

ஒரு நாள் தொடரை பறிகொடுத்த நிலையில், டி20 தொடரை வெல்லும் நோக்குடன் அவர்கள் ஆடுவார்கள் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.

இந்திய உத்தேச அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், விஜய் சங்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, சாஹல்.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com