INDVsNZ: இறுதிவரை போராடிய வாசிங்டன் சுந்தர்! நியூசிலாந்து அணியின் சுழலில் வீழ்ந்த இந்தியா!

INDVsNZ: இறுதிவரை போராடிய வாசிங்டன் சுந்தர்! நியூசிலாந்து அணியின் சுழலில் வீழ்ந்த இந்தியா!
INDVsNZ: இறுதிவரை போராடிய வாசிங்டன் சுந்தர்! நியூசிலாந்து அணியின் சுழலில் வீழ்ந்த இந்தியா!

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஓபனர்கள் பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஃபின் ஆலன், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி 35 ரன்களுக்கு வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 7 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி அரை சதமடித்து 52 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சாப்னை அபாரமான கேட்ச் மூலம் டக் அவுட்டாக்கி வெளியேற்றி மீண்டும் இந்திய அணியை போட்டிக்குள் எடுத்து வந்தார்வாசிங்டன் சுந்தர்.

டேரில் மிட்சல் அரைசதமும்-அர்ஸ்தீப் சிங் 27 ரன் ஓவரும்

அதற்கு பின்னர் களமிறங்கிய டாரில் மிட்சல், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிக்சர், பவுண்டரி என விளாசி நியூசிலாந்தை நல்ல டோட்டலுக்கு எடுத்து சென்றார். 20ஆவது ஓவரில் அர்ஸ்தீப் சிங்கை எதிர்கொண்ட மிட்சல் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட, கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார் அர்ஸ்தீப் சிங். 20 ஓவர் முடிவில் 176 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி. டேரில் மிட்சல் 30 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவின் டாப் ஆர்டர்களை சுருட்டிய நியூசி ஸ்பின்னர்கள்!

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர்கள், நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இஷான் கிஷன், கில், திருப்பாத்தி என அடுத்தடுத்து வெளியேற 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் கைக்கோர்த்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

சூர்யகுமார் தொடர்ந்து ரன்களை சேர்த்துகொண்டிருக்க ஹர்திக் பாண்டியா தட்டிகொடுத்து ஸ்டிரைக் ரொட்டேட் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 47 ரன்கள் சேர்த்திருந்த சூர்யா இஸ் சோதி பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இறுதிவரை போராடினார். 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 50 ரன்கள் குவித்த வாசிங்டன் கடைசி ஓவரில் அவுட்டாகி வெளியேற, நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com