இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆடும் லெவனில் 4வது இடத்திற்கான சர்ச்சை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆடர் வீரர்கள் சொதப்பினர். 3வது வீரராக களமிறங்கும் கேப்டன் விராட் கோல் ஓரளவுக்கு நிலைத்து நின்று ரன்களை எடுத்துவிடுகிறார். ஆனால், அவருக்கு பின்னர் 4வது வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். அந்த இடத்திற்கு நிலையாக ஒரு வீரரை பொறுத்த விராட் கோலியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். முதலில் கே.எல்.ராகுல்., பின்னர் தினேஷ் கார்த்திக் என பலரையும் அவர் முயற்சி செய்துவிட்டார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 323 என்ற கடினமான இலக்கை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகித் 15 (26) மட்டுமே எடுத்து வெளியேறினார். தவான் 36 (30), கோலி 45 (56) ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். விக்கெட்டுகள் விழும் நேரத்தில் நிலைத்து விளையாடக்கூடிய 4வது இடத்தில் களமிறங்கிய ராகுல், 0 (2) ரன்னில் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில், ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.
ராகுல் கோட்டைவிட்ட இடத்தை தினேஷ் பூர்த்தி செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 2 (18) ரன்களில் ரோகித் வெளியேறியது அதிர்ச்சி அளித்தது. ஆனால் தவான் மற்றும் விராட் கோலி நிலைத்து விளையாடி ரன்களை உயர்த்தினர். தவான் 44 (49) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து 4வது வீரராக களமிறங்கினார் தினேஷ். தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21 (22) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. ரெய்னா 1 (4) ரன்னில் வெளியேறினார். இதனால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 256 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து எளிதில் வெற்றி பெற்றது.
இதனால், மிடில் ஆடர் பிரச்னையும், 4வது வீரராக யாரை களமிறக்குவது என்ற பிரச்னையும் பூதாகரமாகி உள்ளது. இந்த தொடர் குறித்து கூறும் கிரிக்கெட் நிபுணர்கள், இந்தியாவில் 4வது இடத்தில் விளையாட சரியான வீரர் கிடைக்காததே காரணம் என்று கூறுகின்றனர். இந்த பிரச்னையில் கே.எல்.ராகுல் தான் 4வது வீரராக களமிறங்க பொறுத்தமானவர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான், கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போஹ்லே தோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து ஹர்ஷா கூறுகையில், தோனி 4வது வீரராக களமிறங்குவது மிடில் ஆடர் பிரச்னைக்கு தீர்வாக அமைவதோடு, அவரது திறமையை காட்டுவதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், “யுவராஜ் சிங், ரகானே, மணிஷ் பாண்டே என பலரையும் அந்த இடத்திற்கு பொறுத்தி பார்த்தாகிவிட்டது. தற்போது, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக்கும் சோதனை செய்து பார்த்துவிட்டோம். ஏன் தோனியை மட்டும் யோசிப்பதில்லை. ஒரு ஜாம்பவானை பேட்டிங் செய்யவே விடாமல் வைத்திருப்பது எப்படி சரியாகும்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதில், தோனியின் பேட்டிங்கு ஆதரவாகவும், விமர்சனம் செய்தும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.