கொரோனா சூழலால் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இந்தாண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 87 ஆண்டுகால ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் இந்தாண்டு போட்டி நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.
1934- 1935 இல் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டது. கொரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் தமிழகம் - பரோடா அணிகள் மோதுகின்றன. மாநில கிரிக்கெட் சங்கங்கள் உடனான கலந்தாலோசனைக்குப் பிறகு 2020 - 2021 உள்நாட்டு கிரிக்கெட் சீசனை சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியுடன் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடர்பான முடிவு, சையது முஷ்டாக் அலி போட்டி நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சிக் கோப்பைப் போட்டியை நடத்துவதில் சிக்கல் உள்ளதால் இந்த வருடம் (2020-21) ரஞ்சிக் கோப்பை போட்டியை நடத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெய் ஷா, கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் "இந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டி நடைபெறவில்லை. உங்களிடமிருந்து கிடைத்த கருத்துகளைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவுள்ளோம். 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியையும் 50 ஓவர் மகளிர் போட்டியையும் நடத்துவதில் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.