இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது.
இங்கிலாந்தின் டெர்பியில் நடந்த இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இந்திய ஏ அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது.
பயிற்சி ஆட்டங்களில் கலக்கிய இந்திய ஏ அணி, இந்தப் போட்டியிலும் கலக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் தடுமாறியது. 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும் ரிஷப் பன்ட் 64 ரன்களும் சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக் குப்பின்ஸ் அபாரமாக ஆடி 128 ரன்கள் குவித்தார். ஷாம் கெயின் 54 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டையும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.