
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இலங்கை வீரர் திசாரா பெரேரா, 74 பந்தில் 140 குவித்தும் அந்த அணி தோல்வி அடைந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.
ராஸ் டெய்லர் 90 ரன், காலின் முன்ரோ 87 ரன், ஜேம்ஸ் நீஷம் 64 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டும் பிரதீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 4 வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா 71 ரன் எடுத்தார். அவரை அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களுடன் இலங்கை தத்தளித்துக் கொண்டிருந்தது. 6 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய திசரா பெரேரா விஸ்வரூபம் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்த அவர், 57 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் அவரது சதம் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
அவர் 74 பந்துகளில் 8 பவுண்டரி, 13 சிக்சருடன் 140 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
13 சிக்சர்கள் விளாசிய பெரேரா, ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் 6 வது இடத்தை பிடித்தார்.
இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி 8 ஆம் தேதி நடக்கிறது.