மும்பையை பந்தாடியது சென்னை : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பையை பந்தாடியது சென்னை : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பையை பந்தாடியது சென்னை : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் குயிண்டான் டி காக் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் 12 (10) ரன்களில் ரோகித் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவித்த டி காக் 33 (20) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் சூர்யகுமார் யாதவ் 17 (16) ரன்களில் அவுட் ஆக, அதிரடியாக விளையாடிய திவாரி 42 (31) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அத்துடன் ஹர்திக் பாண்ட்யா 14 (10) ரன்களிலும், குருணால் பாண்ட்யா 3 (3) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் பொல்லார்ட் 18 (14) ரன்கள், ஜேம்ஸ் பட்டின்சன் 11 (8) ரன்கள் என விக்கெட்டை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சஹார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அத்துடன் டுபிளசிஸ் பவுண்டரி லைனில் இரண்டு கேட்ச்களை பிடித்து ஆட்டத்தின் போக்கை திருப்பினார்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்ஸன் 4 (5) ரன்களிலும், முரளி விஜய் 1 (4) ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு மற்றும் டுபிளசிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரை சதத்தை கடந்த அம்பத்தி ராயுடு 71 (48) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜடேஜா ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 10 (5) ரன்களிலேயே ஜடேஜா எல்.பி.டபிள்யு-வில் அவுட்டாக பின்னர் வந்த சாம் குர்ரான் இறக்கமின்றி மும்பையின் பந்துகளை பறக்கவிடார். 6 பந்துகளில் 18 ரன்களை விளாசினார் ஆட்டமிழந்தார். 

அதற்குள் சென்னை அணி இலக்கை நெருங்கியது. 10 பந்துகளுக்கு 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. அப்போது சென்னை அணியின் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த தோனி களமிறங்கினார். அவர் டிப் கேட்ச்சில் அவுட் ஆனார் என நினைத்தபோது, ரிவிவ்யூ-ல் அவுட் இல்லை என தெரியவந்தது. பின்னர் டுபிளசிஸ் வின்னிங் ஷாட் அடிக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com