162 ரன்கள் எடுத்தது மும்பை : இலக்கை எட்டுமா சென்னை..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் சேர்த்தது.
13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்கை செய்தது. முதல் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் குயிண்டான் டி காக் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் 12 (10) ரன்களில் ரோகித் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ரன்களை குவித்த டி காக் 33 (20) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் 17 (16) ரன்களில் அவுட் ஆக, அதிரடியாக விளையாடிய திவாரி 42 (31) ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அத்துடன் ஹர்திக் பாண்ட்யா 14 (10) ரன்களிலும், குருணால் பாண்ட்யா 3 (3) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் பொலார்ட் 18 (14) ரன்கள், ஜேம்ஸ் பட்டின்சன் 11 (8) ரன்கள் என விக்கெட்டை பறிகொடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சஹார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அத்துடன் டுபிளசிஸ் பவுண்டரி லைனில் இரண்டு கேட்ச்களை பிடித்து ஆட்டத்தின் போக்கை திருப்பினார்.