பஞ்சாபிடம் போராடி வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்! தொடர்ந்து 5வது தோல்வி!

பஞ்சாபிடம் போராடி வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்! தொடர்ந்து 5வது தோல்வி!
பஞ்சாபிடம் போராடி வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்! தொடர்ந்து 5வது தோல்வி!

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், நடப்புத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க முடியாமல் திணறி வருகிறது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் தனது ஐந்தாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் .

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வாலும், ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி வான வேடிக்கை காட்ட, ரன் ரேட் 10க்கு மேல் ஜெட் வேகத்தில் சென்றது. இந்த ஜோடியை பிரிக்க மும்பை அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின. கடைசியாக வீசிய முருகன் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கேப்டன் மயங்க் அகர்வால். அகர்வால் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 97 ரன்கள் குவித்து வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது.

அடுத்ததாக ஷிகர் தவானும் நிலைத்து ஆட, சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த போதிலும் அணியின் ஸ்கோர் 200ஐ குறிவைத்து பயணித்தது. பசில் தம்பி வீசிய பந்தில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார் ஷிகர் தவான். கடைசியில் ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான் ஆகியோரும் அதிரடி காட்ட பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

199 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி, 32 ரன்களில் முக்கிய இரண்டு விக்கெட்களை பறிகொடுத்தது. ரோகித் ஷர்மா 28 ரன்களிலும், இசான் கிஷன் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தனர். 3ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் டெவால் பிரேவிஸ், திலக் வர்மா அதிரடியாக விளையாடி சற்று நம்பிக்கை அளித்தனர். ஓவருக்கு 10 ரன்கள் என்ற கணக்கில் அடித்து வந்தனர்.

அரைசதத்தை நெருங்கிய பிரேவிஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, சூர்யாகுமாரின் தவறால் 36 ரன்களில் ரன் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து வந்த பொல்லார்டும் 10 ரன்களில், ரன்அவுட்டாக, மும்பை அணிக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. 18ஆவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால், கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டன.

மும்பை அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த சூர்யகுமார், 43 ரன்களில் வெளியேறினார். முடிவில் மும்பை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புத் தொடரில் தொடர்ந்து 5ஆவது தோல்வியை சந்தித்தது. வெற்றிக் கணக்கை துவங்க முடியாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடுகிறது மும்பை அணி. இவ்வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com